தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போர் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் கூறியுள்ளது.
போர் மிரட்டல்
இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் நசீர் கான் ஜன்ஜூவா கூறியதாவது: தெற்கு ஆசியாவில் நிலைத்தன்மை என்பது ஊஞ்சலாடி கொண்டுள்ளது. இதனால், அணு ஆயுத போர் நடப்பதை மறுக்க முடியாது. இந்தியா பயங்கரமான ஆயுதங்கள் பலவற்றை வைத்துள்ளதுடன், தொடர்ந்து பாகிஸ்தானுக்கு போர் மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால், தெற்கு ஆசியாவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் கொள்கையை பின்பற்றும் அமெரிக்கா, அந்நாட்டின் குரலையே எதிரொலித்து வருகிறது.
அதிக விலை
பயங்கரவாதிகளை நாங்கள் ஆதரிப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்க முடிவு செய்த பின்னர் தான் பயங்கரவாதம் தலைதூக்க துவங்கியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், நாங்கள் அதிக விலை கொடுத்துள்ளோம். ஆனால், உலக நாடுகள் இதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
அமெரிக்கா சதி
சீனா மற்றும் ரஷ்யா எழுச்சி பெறுவதை விரும்பாத அமெரிக்கா, தெற்கு ஆசியாவில் அதிகார சமநிலைக்கு இடையூறு செய்கிறது. இங்கு சீனா பலம்பெறுவதை தடுக்கவே, சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா சதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.