திருடிய களைப்பு நீங்க உறங்கியோர் பொலிஸாரினால் கைது
கனடாவில் திருடிய களைப்பில். திருடிய வாகனத்திற்குள் உறங்கியவர்கள் பொலிஸாரிடம் கையும் பெய்யுமாக பிடிபட்டுள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரடிப்படி 2.10 மணியளவில் விமானநிலைய வீதி மற்றும் டேறி வீதிப் பகுதியில், சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பீல் பிராந்திய பொலிஸார் திருடப்பட்ட வாகனம் ஒன்றினை அந்தப் பகுதியில் இனங்கண்டுள்ளனர்.
நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தினுள் இருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த வாகனத்தின் முன்பக்கத்தில் முள் பட்டைத் தடுப்பினை ஏற்படுத்திய பொலிஸார், வாகனத்தினுள் இருந்த சாரதியை துயிலெழுப்பும் முகமாக யன்னல் கண்ணாடியில் தட்டியுள்ளனர்.
உறக்கத்தில் இருந்து எழுந்து நிலைமையை உணர்ந்து அதிர்ச்சியுற்ற அவர்கள், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, பொலிஸாரால்; ஏற்படுத்தப்பட்ட தடுப்பில் சிக்கி அந்த வாகனத்தின் சக்கரம் வெடித்த நிலையில், அருகில் இருந்த பொலிஸ் வாகனத்தின் மீது மோதுண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்த சாரதியையும் மற்றையவரையும் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் மீது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயினும் கைதானவர்கள் தொடர்பாகவோ, கடத்தப்பட்ட வாகனம் தொடர்பாகவோ மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.