ஒருவரின் வீட்டில் தங்க நகைகளை திருடி விட்டு ஒன்றும் அறியாதவர் போல் பிரதேச வாசிகளுடன் இணைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது பெஞ்சோ என்று அழைக்கப்படும் மோப்ப நாய் குறித்த திருடனை துல்லியமாக இனம் கண்டு பிடித்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மந்தாரங் நுவர பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது சம்பவ தினத்துக்கு முதல் நாள் குறித்த நபர், மேற்குறிப்பிட்ட பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த அலுமாரியை உடைத்து அதிலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வலப்பனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நுவரெலியாவில் அமைந்துள்ள மோப்ப நாய் பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.
இதன் போது பிரதீப் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் பராமரிப்பிலிருந்து வந்த பெஞ்சோ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது திருடிய நபரால் கைவிடப்பட்ட கைக்குட்டை ஒன்றை பொலிஸ் நாய் மோப்பம் பிடித்துள்ளது.
நாயின் தேடுதல் வேட்டையை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் திருடியதாக கூறப்படும் நபரும் ஒன்றும் அறியாதவர் போல் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதன் போது குறித்த பொலிஸ் மோப்ப நாய் கூட்டத்தில் ஏனையவர்களை விலக்கிக் கொண்டு சென்று குறித்த நபரை துல்லியமாக இனம் கண்டு காட்டிக்கொடுத்துள்ளது.
இதனையடுத்து அங்கு கூடி நின்றவர்கள் அனைவரும் குறித்த நாயையும் அதன் பராமரிப்பாளரையும் வெகுவாக பாராட்டியதுடன் அதனுடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட நபரை வலப்பனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பெரேரா தெரிவித்தார்.