தற்போது பண்டிகை காலம் என்பதால் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு நகரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுவதால், நாளை 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 2000க்கும் அதிகமான பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் கலகம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய அதிகாரத்தையும் பொலிஸ்மா அதிபர் பொலிசாருக்குப் பெற்றுக்கொடுத்துள்ளதோடு காவல்துறையினர் பொலிஸ் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். அத்துடன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய பகுதிகள் அனைத்தும் குறித்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வீதி போக்குவரத்து பொலிஸாரும் அதிகளவில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதனுடன் பட்டாசுப் பாவனைகளின் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறும், சிறுவர்கள் பட்டாசு கொளுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.