சூர்யாவை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்
சூர்யாவை வைத்து பேரழகன் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சசி சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
மலையாள திரைப்பட இயக்குனரான சசி சங்கர்(57), குஞ்ஞிக்கூனன், சங்கர் தாதா, நரயம் என பல்வேறு மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இதில் நரயம் என்ற மலையாள படம் அவருக்கு தேசிய விருது பெற்று தந்தது.
மலையாளத்தில் குஞ்ஞிகூனன் என்ற படத்தை இயக்கிய இவர், தமிழில் அப்படத்தை பேரழகன் என்று இயக்கி அதில் சூர்யா மற்றும் ஜோதிகாவை நடிகர்களாக நடிக்க வைத்தார். மேலும் தமிழில் பகடை பகடை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
சசி சங்கர் நேற்று கேரளாவின் கொல்லஞ்சேரி அருகே உள்ள அவரது வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சசிசங்கருக்கு பீனா என்ற மனைவியும், மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.