சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிசலா பெரா வழக்கின் விசாரணையை சசிகலா கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்று அமுலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் சசிகலா மீதான பிடி இறுகுகிறது.
ஜெ ஜெ டி.விக்கு அப்லிங்க் கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும் அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக சசிகலா மீது அமுலாக்க துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து கடந்த ஆண்டு மே மாதம் சசிகலாவை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது.
அமெரிக்காவில் உள்ள ரின்சார்ட் நிறுவனம் தொடர்பான வழக்கு, சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடெட் தொடர்பான வழக்கு, இன்டர் புட் லிங்க் கம்பெனி தொடர்பான வழக்கில் இருந்து சசிகலாவை விடுவிக்க முடியாது.
இந்த 3 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
டிடிவி. தினகரன் மற்றும் சசிகலாவை விடுவித்த எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அமுலாக்கப்பிரிவு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், டிடிவி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், அன்னிய செலாவணி மோசடி வழக்கை சசிகலா எதிர்கொள்ள வேண்டும் என கடந்த பெப்ரவரி மாதம் ஆணையிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே பெரா வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்குமாறு எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தாக்கல் செய்த மனுவில் தனது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரியுள்ளார்.
இந்த மனுவுக்கு அமுலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள எழும்பூர் நீதிமன்றம், விசாரணையை ஒத்தி வைத்தது.
இதனிடையே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த பெரா வழக்கு விசாரணைக்கு சசிகலா, டிடிவி தினகரன், பாஸ்கரன் ஆகியோர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அமுலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பெரா வழக்கு விசாரணைக்கு ஆஜராக சென்னை வருவாரா அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவாரா என்பது சில தினங்களில் தெரியவரும்.
இந்த வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சசிகலா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை விரைவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவர் மேலும் சில ஆண்டுகள் சிறைக்குள் காலம் தள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.