பிரபல நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் அஜித். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
வெற்றியோ தோல்வியோ எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், தன் குறிக்கோளின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று கொண்டே இருப்பவர் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த மாத இறுதியில் அஜித்தின் அடுத்த பட ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் தான் இப்படத்தையும் இயக்குகிறார். சமீபகாலமாக பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் நடித்து வந்த அஜித், இப்படத்தில் கருமையான முடியுடன், இளமையான தோற்றத்தில் தோன்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை நிரூபிப்பது போல, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் அஜித் அப்படித்தான் தோற்றமளிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல நீச்சல் வீரரான குற்றாலீஸ்வரனை அஜித் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு எங்கே, எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால், நீச்சலில் உலக அளவில் பல விருதுகளை வென்றவரும், கின்னஸ் சாதனை புரிந்தவருமான குற்றாலீஸ்வரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித்தின் எதிர்கால லட்சியம் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியைத் தொடங்குவது தான். எனவே, அது தொடர்பாக குற்றாலீஸ்வரனை அவர் சந்தித்திருக்கலாம் எனத் தெரிகிறது. குற்றாலீஸ்வரனின் பதிவும் அதையே கூறுகிறது.
இந்த சந்திப்பின் போது, அஜித் தான் குற்றாலீஸ்வரனின் ரசிகர் என்று கூறினாராம். அவரின் எளிமை தன்னை சாய்த்துவிட்டதாக குற்றாலீஸ்வரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மெலிந்த தோற்றத்தில், பயங்கர ஸ்டைலீஷாக அஜித் இருக்கும் இந்தப் போட்டோ சமூக வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.