கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம்
எம்.வி.சன்.சீ.கப்பலில் கனடாவிற்கு இலங்கைத்தமிழ் அகதிகளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவர், எதிர்பாராமல் கப்பலின் தலைவராக செயற்பட்டதாக அகதியான லெஸ்லி இமேனுவேல் சாட்சியமளித்துள்ளார்.
2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் குழுவொன்று கனடாவிற்கு எம்.வீ. சன் சீ என்ற கப்பல் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை தற்போது கனடாவில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் 492 பேரை கனடாவுக்கு அழைத்துச்செல்ல உதவியதாக லெஸ்லி இமேனுவேல் என்பவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கனேடிய பிரிட்டிஸ் கொலம்பியா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள லெஸ்லி இமானுவேல் என்பவர், சன்.சீ.கப்பலின் உண்மையான தலைவர் கப்பலை கைவிட்டதன் பின்னர், தான் தலைமைப் பொறுப்பை கையேற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் 15 ஆயிரம் டொலர்களை கட்டணமாக செலுத்தியே குறித்த கப்பலில் அகதியாக சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அவர் 2001ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இருக்கவில்லை, அதற்கு முன்னதாகவே மலேசியாவுக்கு சென்ற அவர், கனடா செல்வதற்கு முன்னதாக தாய்லாந்தில் தங்கி இருந்துள்ளார்.
இலங்கையில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தே கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளார்.
மேலும் அவர் உள்ளிட்ட நான்கு பேர் குறித்த வழக்கு தொடர்ச்சியாக விசாரிக்கப்படுகின்ற நிலையில் நேற்றும் விசாரணைகள் இடம்பெற்றன.