தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் பிப்ரவரி 21-ம் தேதி `நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் கமல் அறிவித்து, அதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கமல்ஹாசன், ‘‘நான் இங்கு தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்கவே வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை. நீங்கள் வாருங்கள் என்று கூறவே வந்துள்ளேன். நாட்டு நடப்பைக் கவனிப்பது மாணவர்களின் கடமை. சும்மா இருங்கள், எதுவும் பேசக் கூடாது என்பது ஜனநாயகமா. வாக்குகள் என்பது வியாபாரம் செய்வதற்கல்ல. அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். திரையுலகில் கால்பதிக்கும்போது நான் இயக்குநராக ஆசைப்பட்டேன். ஆனால், இயக்குநர் பாலச்சந்தர் என்னை மாற்றினார். அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை மாணவர்கள் பார்க்க வேண்டும். நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான்.
அமைதியான முறையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்ற முறையில் காந்திதான் எனக்குப் பிடித்த தலைவர். அதேபோல், கமராஜர், பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களையும் எனக்குப் பிடிக்கும். சாத்தியம் என்பது சொல் அல்ல செயல். அன்பே சிவம், வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. பத்மாவத் படத்தின் பெயரால் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என்று பேசினார்.