ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் 81 வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஊழலை அம்பலப்படுத்திய 15 ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஊடக சுதந்திரம் மற்றும் ஊழல் குறித்து ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் அமைப்பு 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஊழலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 79-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 81-வது இடத்தில் இருக்கிறது.
பூஜ்ஜியம் முதல் 100 வரை மதிப்பெண் அடிப்படையில் ஊழல் நாடுகளில் பட்டியல் கணக்கிடப்படுகிறது. பூஜ்ஜியம் மதிப்பெண் பெறும் நாடு மிகவும் மோசமாக ஊழலுல் சிக்கியுள்ள நாடு 100 மதிப்பெண் பெறும் நாடு ஊழலற்ற நாடு. இந்த மதிப்பெண் பட்டியலில் இந்தியா 40 மதிப்பெண் பெற்று 81-வது இடத்தில் உள்ளது. இந்தியாவைவிட அதிக மதிப்பெண் பெற்று சீனா 77-வது இடத்தில் உள்ளது. 100-க்கு 89 மதிப்பெண் பெற்று நியூசிலாந்தும், 100-க்கு 88 மதிப்பெண்கள் பெற்று டென்மார்க்கும் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.
இது தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, “ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் சில நாடுகளில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளார்கள், எதிர்க்கட்சியினர், சமூக கண்காணிப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு ஆகிய நாடுகளில் மேற்கூறிய தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில், இந்த நாடுகளில் ஊழலை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 100-க்கு 14 மதிப்பெண் எடுத்து சிரியா 178-வது இடத்திலும், 12 மதிபெண்களுடன் தெற்கு சூடான் 179-வது இடத்திலும், 9 மதிப்பெண்களுடன் சோமாலியா 180-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் 117-வது, ஆப்கானிஸ்தான் 177-வது இடம், நேபாளம் 122-வது இடம், மியான்மர் 130-வது இடம், வங்கதேசம் 143-வது இடம், மாலத்தீவு 112-வது இடம், இலங்கை 91-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.