சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதற்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
இந்தப் பின்னணியில் சவுதி ராணுவம் அடிக்கடி ஹவுத்தி கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்குப் பதிலடியாக சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து கடந்த சனிக்கிழமை ஏவுகணை வீசப்பட்டது.
இந்த ஏவுகணையை சவுதி விமானப் படை நடுவானில் தடுத்து அழித்தது.
இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரிடம் ஏவுகணை தொழில்நுட்பம் கிடையாது. ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சியில் ஈரான் ராணுவம் பின்னணியில் இருக்கிறது.
இதனை எங்கள் மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகிறோம். அதன்படி ஈரான் மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கிறோம். ஏமனுக்கு எவ்வாறு ஏவுகணைகள் கடத்தப்படுகிறது என்பதை கண்டறிந்து அம்பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளது.