இங்கிலாந்து பாராளுமன்ற வளாகம் அருகே, சீக்கியர் ஒருவர் மீது தலைப்பாகையை அகற்றுமாறு கூறி இன வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்தவர் ரவ்னீத் சிங். 37 வயதான இவர், இங்கிலாந்திலுள்ள தொழிலாளர் கட்சியின் எம்.பியான தன்மன்ஜீத் சிங் தேசி என்பவரை சந்திப்பதற்காக பாராளுமன்ற எஸ்டேட்டின் போர்ட்கல்லிஸ் இல்லத்தின் வாயில் அருகே, பிற மக்களுடன் வரிசையில் நின்றுள்ளார்.
அப்போது, ரவ்னீத் சிங்கை நோக்கி ஒடி வந்த, ஒருவர், அவரை சரமாரியாக தாக்கியதோடு, தலைப்பாகையையும் அகற்ற முயன்றுள்ளார். இனவெறியுடன் கூடிய கருத்துக்களையும் தாக்குதல் நடத்திய நபர் கூறியதாக ரவ்னீத்சிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்தவரை போல இருந்தாலும் ஆங்கிலத்தில் மர்ம நபர் பேசவில்லை என்றும் முஸ்லீம்களே திரும்பிச்செல்லுங்கள் என சத்தமாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து எம்.பி தேசி, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது வரை மேற்கூறிய சம்பவம் தொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லை.