பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டும் என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி காட்டமாக கூறியுள்ளார். குஜராத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் வட்காம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புதிய ஆதர்ச நாயகனாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார் மேவானி.
தமது தேர்தல் வெற்றி தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது: குஜராத்தில் 150 இடங்களில் வெல்வோம் என பேசினார்கள். ஆனால் அவர்களது கனவு தகர்ந்து போனது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்கப் போகிறது.
எங்கள் இயக்கத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது. இனிவரும் நாட்களில் சட்டசபையிலும் வீதிகளும் எங்களது செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும். பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டியதுதான். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிடம் இருந்து நன்கொடை பெற்றது உண்மைதான். இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார்.